போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் அதிலிருந்த முற்றாக விடுபட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போதைபொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கெதிராக கட்சி பேதமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
“போதைப் பொருள் அற்ற நாடு” என்ற தொனிப்பொருளில் ஜாஎல நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பொலிஸ் உட்பட பாதுகாப்பு பிரிவினர் போதைப் பொருள் பாவனைக்கெதிராக செயற்பட வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அரச திணைக்களங்கள் இரண்டின் அதிகாரிகள் போதைப் பொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் வறுமைக் கோட்டில் வாழக்கூடிய மக்கள் தமது வருமானத்தில் மூன்றில் இரண்டு பகுதியை போதைப் பொருள் பாவனைக்காக செலவிடுவதாகவும், இதன் காரணமாகவே வறுமையும் நோய்களும் அதிகரித்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் அனைத்து அரச நிறுவனங்களிலும் திணைக்களங்களிலும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன் 2020ம் ஆண்டளவில் மது வரி இல்லாத வரவு செலவு திட்டம் ஒன்றை கொண்டு வருவதே தனது இலக்கு என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.