Ad Widget

பொலிஸ் அதிகாரம் மாகாணத்துக்கு வழங்கப்படமாட்டாது – ஜி.எல்.பீரிஸ்

13ஆவது திருத்ததச் சட்டத்தின் ஊடாக எந்தவொரு மாகாணத்துக்கும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது. அதிகாரப்பகிர்வு கூட எந்த ஓர் இனத்துக்கும் தனித்து வழங்கப்படமாட்டது. இது குறித்து இந்திய அரசிடம் இலங்கை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

gl peris

நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அதிகாரப் பகிர்வு குறித்து டில்லியில் என்ன விவாதிக்கப்பட்டது, அதற்கு அரசு என்ன கூறியது என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு மறுநாள் நடைபெற்ற இருதரப்புப் பேச்சின்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அதில் 13ஆவது அரசமைப்புத் திருத்தச்சட்டம் சார்ந்த விடயம் ஓர் அங்கமாகவே இடம்பெற்றது.

13ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான எமது நிலைப்பாட்டை மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசுக்கு ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தோம்.

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியிடமும் எமது நிலைப்பாட்டை நேரில் தெரிவித்துவிட்டோம். எனவே மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசு வழங்காது அதேவேளை அதிகாரப் பகிர்வு கூட எந்த ஓர் இனத்துக்கும் தனித்து வழங்கப்படமாட்டது.

அரசியல் பிரச்சினைக்கான தீர்வு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் மூலமே ஏற்பட முடியும் என்பதையும் இலங்கைத் தரப்பு மீண்டும் இந்தியாவிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குமாறும் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்திய நிலையில் இதனை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts