Ad Widget

பொலிஸார் பக்கச்சார்பாக நடக்கவில்லை – யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்

யாழ்ப்பாணம், நவக்கிரி, சரஸ்வதி வீதியில் டிப்பர் ரக வாகனம் மோதி கர்ப்பிணி பலியான விடயத்தில் பொலிஸார் எவ்விதத்திலும் பக்கச்சார்பாக நடந்துகொள்ளவில்லை என்று யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார்.

makeswarey-tipper-acci

மாத முடிவிற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது. இதன்போது, நவகிரி பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறியதாவது,

‘மேற்படி சம்பவத்தில் மோதிய டிப்பர் வாகனம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் கீழுள்ள மகேஸ்வரி நிதியத்திற்குச் சொந்தமானது.

இந்நிலையில், விபத்து இடம்பெற்று சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

விபத்து இடம்பெற்றதற்கான தடயத்தை அழிப்பதற்காகவே சடலத்தை பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அது முற்றாகத் தவறு.

ஒருவர் இறந்தமை தொடர்பில் பொலிஸாரால் அறிய முடியாது. வைத்தியரே கூறமுடியும். ஆகவே. மேற்படி விபத்தில் சிக்கிய பெண் உயிருடன் இருக்கின்றார் என நினைத்து பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். மாறாக தடயத்தை அழிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவில்லை’ என தெரிவித்தார்.

மேலும், ‘இந்த சம்பவத்தில் டிப்பர் வாகனத்தை எரித்தவர்களை நாங்கள் கைது செய்யவில்லை. அவர்களை அடையாளம் காண்பதற்குக்கூட நாங்கள் முயற்சிக்கவில்லை. இந்நிலையில் எவ்வாறு பொலிஸார் பக்கச்சார்பாக நடந்தனர் என்று கூற முடியும்’ என கேள்வி எழுப்பினார்.

‘அவ்வாறிருக்க, மேற்படி விபத்துச் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன?’ என்று உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், ‘இலங்கையில் எப்பாகத்தில் வாகனங்கள் எரியூட்டப்பட்டாலும் அவ்விடத்திற்கு பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் செல்வது வழமை. அந்தவகையில் மேற்படி சம்பவத்திற்கும் அதிகளவான பொலிஸார் சென்றிருந்தனர்’ எனக் கூறினார்.

கனரக வாகனங்கள் பயணிக்க தடை

இதேவேளை, ‘கனரக வாகனங்கள் நுழைய முடியாத சிறு வீதிகளுக்கு அறிவித்தல் பலகைகளை வைப்பதற்கான நடவடிக்கைகளை, வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக’ பி.ஏ.நிஹால் பெரேரா இதன்போது குறிப்பிட்டார்.

‘நவக்கிரி பகுதியில் சிறிய வீதியினூடாக கனரக வாகனம் ஒன்று நுழைய முற்பட்டமையாலேயே வியாழக்கிழமை (28) கர்ப்பிணிப் பெண்ணொருவர் மரணமடைந்தார். அந்த வீதியினூடாக கனரக வாகனம் பயணிக்க முடியாது.

இனிவரும் காலங்களில் பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து, கனரக வாகனங்கள் நுழைய முடியாத வீதிகளுக்கு அறிவித்தல் பலகைகள் வைக்கவுள்ளனர்.

அதனையும் மீறி சிறிய வீதியூடாக கனரக வாகனங்களுடன் செல்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts