Ad Widget

பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்க முடியாது ; வட மாகாண சபை

குற்றங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என வட மாகாண பதில் முதலமைச்சர் த. குருகுலராசா மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சி. தவராசா ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

அவசரகாலச்சட்டம் அமுலில் இல்லாத நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்திக் கொலை செய்த சம்பவத்தை, ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவு கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து தமது கண்டனத்தைத் வெளியிட்டுள்ள அவர்கள குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் விரைவாக நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களைக் கண்டிப்பதனாலோ, சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரித்து தண்டிப்பதன் ஊடாகவோ நாம் உண்மையான நிலைமையை அறிந்து கொள்ளவோ, எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் தடுக்கவோ முடியாது.

இவ்வாறான பாரிய கொலைக்குற்றங்கள் தொடர்பாக கடந்த காலங்களில் வெறும் கண்துடைப்பு விசாரணைகள் நடைபெற்ற வரலாற்றையும் எம்மால் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

அதனால் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு அடிப்படையாக இருந்த காரணிகளை முற்றாக அறிவதற்கு ஓர் ஆக்க பூர்வமான விசாரணைக்குழு ஒன்றை அமைத்து ஒரு பூரண விசாரணை நடாத்தப்படவேண்டும்

மாணவர்களின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவர்களது பெற்றோர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், பல்கலைக்கழக சக மாணவர்கள், நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என வட மாகாண பதில் முதலமைச்சர் த. குருகுலராசா மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சி. தவராசா ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

Related Posts