பொருட்களின் விலையேற்றம் நாளாந்த வாழ்க்கைக்கு அச்சுறுத்தல்: டக்ளஸ்

பொருட்களின் விலையேற்றங்கள் எமது மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான விவாதம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள், இந்த அரசாங்கத்தின் இருப்பு மீதான மக்களின் நம்பிக்கைக்கு சவால் விடுகின்ற அரசியல் செயற்பாடுகளாக அமைந்துள்ளன. இந்நிலையில், எமது மக்களின் நாளாந்த வாழ்க்கையின் மீது பாரிய அச்சுறுத்தலை செலுத்தி வருகின்ற பொருட்களின் விலையேற்றங்கள் குறித்து அரச தரப்புகளால் கண்டு கொள்ளாமல் விடப்படுவதாகவே பொது மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு முன்பாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, சீனி போன்ற பொருட்களின் விலைகளை ஓரளவு குறைந்த மட்டத்தில் தக்க வைத்துக் கொள்வதற்கு அரச தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய நிலையில் அத்தகைய விலைக் கட்டுப்பாடுகள் நிலவுவதாகத் தெரிய வரவில்லை.

சதொச விற்பனை நிலையம், கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற அரச விற்பனை நிலையங்களில்கூட தற்போது அரிசியின் விலைகள் அதிகரித்தே காணப்படுகின்றன. அதே போன்றுதான் ஏனைய அத்தியாவசியப் பொருட்களினது விலைகளும் அதிகரித்தே உள்ளன.

இத்தகையதொரு நிலையில் விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டம் தொடர்பில் இங்கு வாதப் பிரதி வாதங்களை மேற்கொண்டிருக்கின்றோம்.

மறைமுக வரிகளைக் குறைத்தும், நேரடி வரிகளை அதிகரித்தும் வரிகளின் மூலமான வருமானமே குறிக்கோளாகக் கொள்ளப்படுகின்றது. எமது மக்களுக்கு இவை எத்தகைய சுமைகளைக் கொண்டு வருகின்றன என்பதைச் சிந்தித்து, அதற்குரிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts