Ad Widget

பொதுமன்னிப்பு வழங்கியும் சிறையில் வாடும் உதயசிறி

ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன, பொதுமன்னிப்பு வழங்கியும் இதுவரை எனது மகள் உதயசிறி விடுதலை செய்யப்படாதது பெரும் கவலையளிக்கின்றது என, சிகிரியா பளிங்குச் சுவரில் எழுதிய குற்றத்துக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு – சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறியின் தாய் எஸ்.தவமணி தெரிவித்தார்.

சிகிரியா குன்றிலுள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றத்துக்காக அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் உதயசிறியை அவரது தாய் தவமணி கடந்த வியாழக்கிழமை சென்று பார்த்தார்.

இதன்போது தன்னை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என மகள் உதயசிறி தன்னிடம் மன்றாடியதாகவும் தாயான தவமணி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி, எனது மகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாக கூறியும் இதுவரை உதயசிறி விடுதலை பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக எந்தவொரு அறிவித்தலும் அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் வரவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்ததாக தாய் தவமணி மேலும் கூறினார்.

மகளை பார்ப்பதற்காக வியாழக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற போது, நான் மகளுக்காக கொண்டு சென்ற எந்த உணவுப் பொருளையும் உள்ளே கொண்டு செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சவர்க்காரத்தை மட்டும் கொண்டு செல்ல அனுமதித்தனர் எனவும் தாய் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts