Ad Widget

பொதுமக்கள் மனம் தளராமல் தமது உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் : இரா.சம்பந்தன்

பொதுமக்கள் மனம் தளராமல் தமது உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுடன், எதிர்க்கட்சி தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கேப்பாப்புலவு காணிகளை விடுவிப்பதற்கான அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் நல்லதொரு முடிவினை மக்களுக்கு பெற்றுத்தருவதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கேப்பாப்புலவு மக்கள் தமது காணி விடுவிப்பு தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதேவேளை கேப்பாப்புலவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து காணிகளை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts