Ad Widget

பொட்டுக்கேடுகள் அம்பலமாகிவிடும் என்பதற்காகவே த.தே.கூ பங்கேற்கவில்லையாம்!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்றிருந்தால், அவர்களது பொட்டுக்கேடுகள் அம்பலமாகிவிடும் என்பதற்காகவே பங்கேற்கவில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

22538460Untitled-1

மன்னாரில் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளுடான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில காலங்களுக்கு முன்னர் இங்கு அமைதியற்ற, சுதந்திரமற்ற சூழலே இருந்து வந்தது. எந்த நேரத்திலும் என்னவும் நடக்கலாம் என்கின்ற அச்சநிலையே இருந்தது.

ஆனால், தற்போது அந்த நிலை முற்றாக மாற்றியமைக்கப்பட்டு ஒரு அமைதிச் சூழல் நிலவுகின்றது. இவ்வாறான அமைதியான சூழலில் அரசு பல்வேறுபட்ட அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது.

ஆனாலும், இதை விரும்பாத சுயலாப அரசியல்வாதிகள் பொய்த்தனமான பிரசாரங்களை முன்னெடுத்து மக்களை குழப்பி வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் எனது அழைப்பை ஏற்று வடபகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதியின் தலைமையில் வீரசிங்கம் மண்டபத்தில் மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர்கள் அதைப் புறக்கணித்திருந்தனர்.

வடக்கில் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூடிமறைத்து வருகின்றனர்.

ஏனைய மாகாணங்களை விடவும் வடக்கு மாகாணத்திற்கு அதிகளவு நிதி அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும் அதில் மிகக் குறைந்தளவிலான நிதியினையே வடக்கு மாகாண சபை செலவு செய்துள்ளனர்.

வடபகுதியின் அபிவிருத்திக்கு அரசும், வடமாகாண ஆளுநரும் தடையாக இருக்கின்றனர் என பல்வேறுபட்ட உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களது பொய் பிரசாரங்கள் தொடர்பில் இந்த அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துரையாடப்படும் போது எல்லாவிதமான பொட்டுக் கேடுகளும் அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினாலேயே அவர்கள் அந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

Related Posts