Ad Widget

பேருந்தில் கடத்தப்பட்ட 2 கிலோ கஞ்சா மீட்பு இருவர் கைது

கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பிரிவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரின் விசேட வீதிப் பரிசோதனையின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு இ.போ.ச பேருந்தில் கடத்தப்பட்ட கேரளக் கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு அரச பேருந்தில் கஞ்சா கடத்திச் செல்வதாக கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பதாக ஏ9, வீதியில் விசேட வீதிப்பரிசோதனையில் ஈடுபட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது பயணப் பையினுள் மறைத்து வைத்திருந்த இரு கிலோ கேரளக் கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதுடன் அதனை பயணப் பொதியில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவத்தில் கைப்பற்றப்பட்டுள்ள தடயப் பொருட்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதுடன் கைதான சந்தேக நபர்களிடம் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் தடயப் பொருட்களுடன் சந்தேக நபர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts