Ad Widget

பேரணியைக் குழப்பும் பொருட்டு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன!

தமிழ் மக்கள் பேரவையின் பேரணியைக் குழப்பும் பொருட்டு ஒரு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன என எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளதுடன்,

பேரணிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சட்டபூர்வமாகச் செய்யப்பட்டிருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும்- 24 ஆம் திகதி சனிக்கிழமை காலை-09 மணிக்கு எழுக தமிழ் மக்கள் பேரணி நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் முன்றலிலிருந்தும், யாழ். பல்கலைக்கழக முன்றலிலிருந்தும் ஆரம்பமாகி யாழ். முற்றவெளியைச் சென்றடையவுள்ளது.

முற்றவெளியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களும் உரையாற்றுவதுடன் முக்கியமான பிரகடனங்களும் மேற்கொள்ளப்படும்.

யாழ்ப்பாணம் கச்சேரி முன்றல், கல்வியங்காடு போன்றவிடங்கள் மாற்றப்பட்டு நல்லூர், யாழ். பல்கலைக்கழக முன்றலிலிருந்து மாத்திரம் பேரணிகள் புறப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமத்தின் பலபகுதிகள், தீவகத்திலிருந்தும் மக்கள் இலகுவாக இப்பேரணியில் பங்கு கொள்ளும் பொருட்டுப் பேரூந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமது சொந்த வாகனங்களில் வரக்கூடியவர்கள் அனைவரும் காலை-09 மணிக்கு முன்பாகப் பேரணி ஆரம்பிக்கும் இடங்களுக்கு வருமாறும் அன்புடன் வேண்டுகின்றோம்.

பேரணியைக் குழப்பும் பொருட்டு ஒரு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன.

பேரணிக்குத் தேவையான அனைத்துப் பணிகளும் சட்டபூர்வமாகச் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை மக்களுக்கு அறியத்தருவதுடன், யாழ். மாவட்டத்தின் அனைத்து வர்த்தக சங்கங்களும் தமது வியாபார நிலையங்களைப் பூட்டி எழுக தமிழ் பேரணியில் பங்கு கொள்வதாக அறிவித்துள்ளனர்.

அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அத்துடன் யாழ். மாவட்டத்திலுள்ள தொழிற்சங்கங்களும், சிவில் அமைப்புக்களும், பொது அமைப்புக்களும், பல்கலைக்கழகச் சமூகமும் மற்றும் கற்றல் கற்பித்தல் சமூகங்களும் பேரணியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

மேற்குறிப்பிட்ட அனைத்து அமைப்பினரும் எழுக தமிழ் என்ற சொற்பதத்துடன் அவர்களது பதாதைகளுடன் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம் என தெரிவித்தார்.

Related Posts