அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையினை அரசாங்கமே முறித்துக்கொண்டது. மீளவும் இந்தப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு தென்னாபிரிக்காவிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராகவே உள்ளோம். ஆனால் அரசாங்கத்தை வழிக்கு கொண்டுவரவேண்டியது உங்களின் பொறுப்பாகும் என்று தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியும் பதில் ஜனாதிபதியுமான சிறில் ரமபோஷா தலைமையிலான தூதுக்குழுவிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை வந்திருந்த ரமபோஷா தலைமையிலான தென்னாபிரிக்க தூதுக்குழுவினரை நேற்றுக்காலை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 7.15 மணிமுதல் 8.45 மணிவரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போதே கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன் செயலாளர் மாவை சேனாதிராஜா, எம்.பி.க்களான சுரேஷ்பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சந்திப்பின் போது கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கையின் தற்போதைய நிலை குறித்தும் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையினை ஆரம்பிப்பதிலுள்ள முட்டுக்கட்டைகள் குறித்தும் எடுத்துக்கூறியுள்ளனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பிரதிநிதிகள், யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அரசாங்கமானது அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் எதனையும் எடுப்பதாக இல்லை. மேலும் மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் நடவடிக்கையிலேயே அரசாங்கம் ஈடுபட்டள்ளது. வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின்தேவைக்கென தொடர்ந்தும் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இராணுவப் பிரசன்னமும் அதிகரிக்கப்படுகின்றது. மக்களின் காணிகள் இராணுவத் தேவைக்கு சுவீகரிக்கப்பட்டு வருவதனால் மக்கள் முழுமையாக மீளக்குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தான் வடக்கிலிருந்து இராணுவத்தினரை அகற்றுமாறு நாம் கோரிவருகின்றோம். இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்து மக்களை முழுமையாக குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவ்வாறான நிலை ஏற்பட்டால் தான் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.
அரசாங்கத்துடன் 2011 ஆம் ஆண்டு நாம் ஒருவருடகாலம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அரசியல் தீர்வுக்கான தீர்வுக்கான திட்டமொன்றினையும் அரசாங்கத்திடம் கையளித்திருந்தோம். ஆனால் அதற்கு பதிலளிக்காத அரசாங்கம் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டது. 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18, 19 ,20 ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. நாம் பேச்சுவார்த்தைக்காக சென்று காத்திருந்தபோதும் அரசாங்கத்தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் நாம் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தோம்.
பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு அரசாங்கம் தெரிவுக்குழுவொன்றை அமைத்துவிட்டு அந்தத் தெரிவுக்குழுவிற்கு வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று தெரிவித்தது. ஆனால் அரசாங்கத்துடன் நேரடிப்பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியல் தீர்வு தொடர்பில் இணக்கம் காணப்பட்ட பின்னர் அதனை அங்கீகாரத்திற்கு தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம் என நாம் வலியுறுத்தினோம். ஆனால் இதற்கு அரசாங்கம் உடன் படவில்லை. தெரிவுக்குழுவில் 31 பேர் ஆளும்தரப்பினருக்கு சாதகமாக இருக்கும் போது ஆகக்குறைந்தது மூன்று பிரதிநிதித்துவத்தைக் கொண்ட நாம் கூறும் விடயம் அங்கு எடுபடபோவதில்லை.
அரசாங்கமானது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.அத்துடன் எத்தகைய ஒப்பந்தங்களையும் நடைமுறைப்படுத்த வில்லை. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலாக சென்று தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இந்தியா சென்றபோது உறுதியளித்திருந்தார். ஆனால் இலங்கை திரும்பியதும் வடக்கு, கிழக்கிற்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்க முடியாது என்று கூறுகின்றார். இவ்வாறு முரண்பட்ட செயற்பாடுகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
தென்னாபிரிக்காவின் உதவியுடன் அரசியல் தீர்வுக்கான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க நாம் அன்றும், இன்றும் தயாராகவே உள்ளோம். ஆனால் அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவரவேண்டியது உங்களது பொறுப்பாகும். அவ்வாறு பேச்சுக்கள் ஆரம்பித்தால் நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.
நாம் அரசியல் தீர்வு விடயத்தில் கசப்பான அனுபவங்களையே கொண்டிருக்கின்றோம். பல ஒப்பந்தங்கள் தென்பகுதி அரசாங்கங்களினால் கிழித்தெறியப்பட்டன. இந்திய, இலங்கை ஒப்பந்தம் கூட நடைமுறைக்கு வரவில்லை. அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையினை முறித்துக் கொண்ட அரசாங்கம் மீண்டும் பேசுவதற்கு முன்வந்தால் நாமும் அதற்கு தயாராக உள்ளோம் என்று இந்தப் பேச்சுவார்த்தையின்போது கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷா தலைமையிலான தூதுக்குழுவினர், எமது நாட்டின் அனுபவங்களை கொண்டு இலங்கையிலும் பேச்சுவார்த்தையினை ஆரம்பிப்பதற்கு முயற்சி மேற்கொள்வதற்கே இங்கு வந்துள்ளோம். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே நாம் இலங்கை வந்திருக்கின்றோம். எமது குழுவின் விஜயம் தொடர்பில் பத்திரிகைகள் எம்மீது குற்றம் சுமத்தி செய்திகளை வெ ளியிட்டுள்ளமை கவலையளிக்கின்றது. இது குறித்து அரசாங்கத்தரப்பினரிடமும் எடுத்துக்கூறியுள்ளோம்.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிமசிங்க உட்பட அரச தூதக்குழுவினரை சந்தித்து நாம் பேசியிருக்கின்றோம் என்று கருத்து கூறியுள்ளனர்.
சம்பந்தன் கருத்து
இந்தச் சந்திப்புக் குறித்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில்;
தென்னாபிரிக்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்தது. இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கக் குழுவினர் மத்தியஸ்தம் வழங்கினால் நாம் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்.
அவர்கள் தமது நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வந்தனர் என்பது குறித்து எமக்கு விளக்கினர்.இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கு தாம் முழு ஆதரவை வழங்குவோம் என்றும் தென்னாபிரிக்க குழுவினர் உறுதியளித்தனர்.
ஏற்கனவே தென்னாபிரிக்காவில் நாம் தீர்வு முயற்சிகள் குறித்து சந்திப்புக்களை நடத்தியிருந்தோம். இதன் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பும் அமைந்தது.இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கக் குழுவினர் மத்தியஸ்தம் வழங்கினால் நாம் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்.
இங்கு பல தரப்பட்ட தரப்பினர் இருக்கின்றனர் அவர்களுடனும் விரிவாகப் பேசி ஓர் இணக்கத்திற்கு வருவதே முக்கியமானது என்றார்.
சுமந்திரன் கருத்து
சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சுமந்திரன் எம்.பி. கூறியதாவது;
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயம் தொடர்பில் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷா தலைமையிலான குழுவினருடன் சுமார் ஒன்றறை மணிநேர பேச்சுவார்த்தை நடத்தினோம். கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தென்னாபிரிக்க விஜயத்தினை மேற்கொண்டு சிறில் ரமபோஷாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். அதன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையாகவே தற்போது இச்சந்திப்பு அமைந்துள்ளது.
இந்த சந்திப்பின்போது இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக தென்னாபிரிக்கா நல்க இருக்கும் உதவிகள் எவ்வாறானதாக அமையும் என்பதே பிரதானமாக பேசப்பட்டது. குறிப்பாக இலங்கையில் தீர்க்க முடியாத பெரிய பிரச்சினைகள் இங்கு உள்ளன. யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் இருக்கும் மோசமான நிலைமைகள், வன்முறைகள் பற்றியே அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். அதேபோல் வடக்கிற்கு வந்து தமிழ் மக்களின் நிலைமைகள் என்னவென்பதை நேரடியாக அறிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம். இன்று வடக்கில் உள்ள மக்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
தென்னாபிரிக்காவின் சொந்த அனுபவத்தில் இருந்து தமிழர் தரப்பிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் உதவிகளை வழங்க இருக்கின்றனர். இவ்வாறான தென்னாபிரிக்காவின் உதவிகளை நாம் ஆரம்பத்தில் இருந்தே வரவேற்றுள்ளோம். தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பில் ஆதரிப்போம். அதேபோல் அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தென்னாபிரிக்கக் குழுவினர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். நாமும் அவர்களை வரவேற்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
தென்னாபிரிக்க கறுப்பினப் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மை வெள்ளையருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கிய பங்காற்றியவர்களாக ரமபோசாவும் றூத் மேயரும் விளங்குகின்றனர்.
கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிரதிநிதியாக இப்போதைய உப ஜனாதிபதி சிறில் ரமபோசாவும் வெள்ளையர்களின் பிரதமரான டி கிளார்க்கின் பிரதிநிதியாக றூத் மேயரும் செயற்பட்டனர்.
இவர்கள் இருவரின் மூலமே அந்த நாட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு தரப்பிலுமாக முக்கியத்துவம் வகித்த பிரதிநிதிகள் இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கு வந்திருப்பது முக்கியமானது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.