Ad Widget

பெப்ரவரி 4ஆம் திகதி விடுவிக்காவிடின் போராட்டம் தொடரும்! – தமிழ் அரசியல் கைதிகள் அறிவிப்பு

“எதிர்வரும் பெப்ரவர் மாதம் 4ஆம் திகதி – இலங்கையின் சுதந்திர தினத்தன்று எம்மை விடுவிக்காவிடின் சிறைச்சாலைகளில் எமது விடுதலைக்கான போராட்டம் தொடரும்.”

– இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழ் அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு கூறினர்.

முன்னதாக தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதாக அரசால் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், கைதிகள் பிணையில் செல்லவே அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், தற்போது அவர்களைப் புனர்வாழ்வுக்குட்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்தநிலையில், தமது விடுதலை குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது அரசுக்கான இறுதி எச்சரிக்கை என்றும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் தமிழ், சிங்கள அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சுவிசர்லாந்தில் சர்வதேச ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts