Ad Widget

பூரண ஹர்த்தாலுக்கு ஒத்துழைக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை

வடமாகாணம் முழுவதும் நாளை செவ்வாயக்கிழமை (25-10-2016) நடைபெறவுள்ள பூரண ஹர்தாலுக்கு ஒத்துழைக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வியாழக்கிழமை (20-10-2016) இரவு ஸ்ரீலங்கா பொலீசாரினால் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் ஏற்பாட்டில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாகாணம் முழுவதும் எதிர்வரும் செவ்வாயக்கிழமை (25-10-2016) நடைபெறவுள்ள பூரண ஹர்தாலுக்கு ஒத்துழைக்குமாறு அனைத்து தரப்பினரையும் வேண்டுகின்றோம்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கே.கே.எஸ் வீதி குளப்பிட்டிப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இக் கொடூர சம்பவத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

சமாதான காலத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் பொலிஸாருக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டதாக எந்த ஒரு சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. இந்த நிலையில் பொலிஸார் தமக்கு உயிர் ஆபத்து இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த மாணவர்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காது, கொலை செய்தமை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். மாணவர்களை கொலை செய்யும் நோக்குடன் பொலிஸார் துப்பாக்கி பியோகம் மேற்கொண்டனர் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

மாணவர்கள் மீதான படுகொலையை கண்டித்தும், மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரியும், எதிர்காலத்திலும் இவ்வாறான படுகொலைகளும், வன்முறைகளும் மாணவர்கள் மீது மீண்டும் நிகழாமல் இருப்பதனை உறுதிப்படுத்தவும் நாளை நடைபெறவுள்ள முழுமையான ஹர்த்தால் அமைதியான முறையில் இடம்பெற அனைவரையும் ஒத்துழைக்குமாறு கோருகின்றோம்.

ஹர்த்தால் தினத்தன்று அவசர மருத்துவ தேவைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும், எவரும் எவ்விதமான வன்முறைகளிலும் ஈடுபடாது அமைதியான முறையில் ஒத்துழைக்குமாறும் கோருகின்றோம்.

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts