புலி சீருடை விவகாரத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட இளைஞனுக்கு பிணை கிடைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த இளைஞனின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (29.12.2023) இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞன் தனது பெற்றோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உங்கள் மகனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் நான் பேசினேன். ஜனாதிபதியே சட்டமா அதிபரை தொடர்பு கொண்டு பிணை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்த நிலையில் அவருக்கே நீங்கள் நன்றி கூற வேண்டும்.
ஆகவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போது அவருக்கு உரிய நன்றியை நீங்கள் கூறுங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வழக்கிலிருந்து உங்கள் மகனை முழுமையாக விடுவிப்பதற்குரிய ஏற்பாடுகள் கால கிரமத்தில் சாத்தியமாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.