Ad Widget

புலம்பெயர் உறவுகளுக்கு தமிழ் மக்கள் பேரவையின் வேண்டுகோள்

தமிழ் மக்கள் பேரவை புலம் பெயர் தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது. அதன் முழுவடிவம் வருமாறு..

புலம்பெயர் உறவுகளுக்கு தாயகத்திலிருந்து ஒரு அன்பான வேண்டுகோள்.

முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் பின் தாயக அரசியல் ஒரு சரணாகதி அரசியலாக மாறி வந்த தருணத்தில், தமிழ் இனத்தின் இருண்ட எதிர்காலம் கண்களில் தெரியவே தாயகத்தில் தமிழ் மக்கள் பேரவையின் தேவை மிக அவசியமாகியது. சுதந்திர உலகில், புலம்பெயர் பலமே இன்று திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற நிலையில், தாயகத்தில் நாம் எதிர்நோக்கும் சவால்களை, நாங்கள் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை.

இந்த நிலையிலேயே கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, தாயகத்தில் திட்டமிட்ட வகையில் மிகவும் விரைவாக செயற்படுத்தப்பட்டு வரும் தமிழ் இன அடையாள அழிப்பை தடுக்கவும், எமது மக்கள் அழிக்கப்பட்டதற்கு நீதி கேட்கவும், எமக்கான ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்க உழைக்கவும் என்று எமது சக்திக்கேற்ற வகையில் செயற்பட முக்கியமான சில உபகுழுக்களை உருவாக்கியது.

இந்த வகையில், முதலில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் உபகுழு மிகவும் நேர்த்தியாக செயற்பட்டு, மக்கள் கலந்துரையாடல் மூலம் வரலாற்றிலேயே முதற்தடவையாக எமக்கான உறுதியான ஒரு நிரந்தரத் தீர்வுத்திட்டத்திற்கான வரைபை உருவாக்கி அது இன்று சர்வதேச சமூகத்திடம் கையளிக்கப்பட்டு, எமது மக்களின் எதிர்பார்ப்பு என்னவென்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தமது பங்களிப்புக்களை அளித்த சகல புலம்பெயர் நிபுணர்களுக்கும், மற்றும் தமது கருத்துக்களை பல வழிகளிலும் வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது அடுத்த கட்ட நடவடிக்கையாக 2009 தமிழ் இன அழிப்பிற்கு பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணைக்கான உபகுழு, இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவு தினமன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு அது தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.

மேலும் திட்டமிட்ட எமது கலாச்சார சீரழிவுகளை தடுக்கவும், கலைகளை வளர்க்கவுமாக, கலை, கலாச்சார உபகுழுவும், மற்றும் எமது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், எமது தேசத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவுமாக சமூக பொருளாதார வலுவூட்டலுக்கான உபகுழு ஆகிய இரு உபகுழுக்கள் நிபுணர்கள் பலரை உள்வாங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ் உபகுழுக்களின் செயற்பாடுகள் பற்றிய விளக்கம் எதிர்வரும் 2ஆம் திகதி ஊடகங்கள் வாயிலாக விரிவாக வெளியிடப்படும்.

புலம்பெயர் உறவுகளே,

தாயகத்தில் செயற்படும் எம்முடன் இணைந்து இவ் உபகுழுக்களின் செயற்திட்டங்களில் செயற்பட புலம்பெயர் உறவுகள் பல தனி நபர்களாகவும், அமைப்பு ரீதியாகவும் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். அந்த வகையில், எம்முடன் சேர்ந்து செயற்பட விரும்பும் புலம்பெயர் உறவுகள் கீழ்க்காணும் தகவல்களுடன் எமக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளும்படியும், அதனைத்தொடர்ந்து எமது செயற்குழு தங்களுடன் நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்தி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான திட்டங்களை தீர்மாணிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: contact@tamilpeoplescouncil.org

தேவையான விபரங்கள்:
1. அமைப்பின்/தனி நபர்/குழுவிற்கான பெயர்:
2. நாடு:
3. நாம் உங்களில் தொடர்புகொள்ளவேண்டியவர் பெயர்:
4. தொலைபேசி இலக்கம்:
5. மின்னஞ்சல்:

புலம்பெயர் பலமே இன்று தாயக மக்களின் ஊன்றுகோல். இப்பலத்தை அடுத்த கட்டமாக்கி, எமது மக்களுக்கான ஒரு திட்டமிட்ட வளர்ச்சிக்கான படிக்கற்கலாக்கி, நாம் ஒரு தனித்துவமான இனமாக தலை நிமிர்ந்து நிற்க அனைத்து உறவுகளையும் எம்முடன் கைகோர்க்குமாறு மிகவும் உரிமையுடனும், அன்புடனும் வேண்டிக்கொள்கின்றோம்.

நன்றி,

செயற்பாட்டுக் குழு
தமிழ் மக்கள் பேரவை

Related Posts