தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியமை மற்றும் அவ் அமைப்புடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய புனர்வாழ்வு பெற்று வந்த கிராம அலுவலர்கள் உள்ளிட்ட 20 பேர் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டனர்.
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனகரத்னாயக்கா உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியதாக கிளிநொச்சி மாவட்டத்தைச் சோந்த 11 கிராம அலுவலர்களுக்கு 3 மாதம் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்தது.
அவர்களின் புனர்வாழ்வுக் காலம் நிறைவடைந்த நிலையில் அக் கிராம அலுவலர்கள் 11 பேர் உள்ளடங்களாக வவுனியா, பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த 20 பேர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.
இதன்போது சமூகத்துடன் முன்னர் இணைக்கப்பட்ட 28 முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார நடவடிக்கைக்காக நீர் இறைக்கும் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.