புனர்வாழ்வு பெறாத 275 முன்னாள் போராளிகள் வடக்கில் சுதந்திரமாக உலாவருவதாகவும், அவர்கள் தாமாக முன்வந்து சரணடையாத போதிலும் அவர்களால் தேசிய பாதுகாப்புக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பலாலி இராணுவப் படைத் தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியதாவது,
‘யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் குறைந்தளவிலேயே உள்ளனர். குறிப்பாக 270 குடும்பங்களே நாவற்குழி பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ளனர். யுத்தத்துக்கு முன்னர் அங்கு அதிக சிங்கள மக்கள் இருந்தாலும் அவர்களுக்கு சொந்த வீடுகளோ காணிகளோ இருந்ததில்லை.
குத்தகை அடிப்படையிலேயே காணிகள், வீடுகளை அவர்கள் கைவத்திருந்தனர். அதிலும் அதிகமானவர்கள், ரயில்வே திணைக்களம் மற்றும் தொழில் ரீதியில் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தனர். இது தான் இங்கு சிங்கள மக்கள் குறைந்தளவில் குடியேறியுள்ளமைக்ககு காரணம் என்றார்.
புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகள் என 275 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதில் 55 பெண்கள் அடங்குகின்றனர். இவர்கள், தாமாக முன்வந்து சரணடையாத போதிலும், அவர்களால், தேசிய பாதுகாப்புக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.
இதுவரையில், 2,963பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 615பேர் பெண்களாவர். இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு தான் எமது நோக்கம். அதற்காகவே செயற்படுகின்றோம்.
ஆயுதக் குழுக்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில், புலனாய்வுப் பிரிவின் ஊடாக அவதானித்து வருகின்றோம்.’ என்றும் கூறினார்.