Ad Widget

புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு பூர்த்தியடையும்

தமிழ் மக்கள் பேரவை தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தீர்வுத்திட்ட வரைபை முழுமையாக்குமெனவும், அதன் பின்னர் அரசாங்கத்திற்கு கையளிக்கும் எனவும் பேரவையின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பேரைவை தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்ட யோசனையை முன்வைத்து கருத்துக்களைப் பெற்று வருகின்றது.

இந்தநிலையில் மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் கூட்டங்களை நடத்தியுள்ளது.

ஏனைய இடங்களிலும் கூட்டங்களை நடத்தி தீர்வு யோசனை தொடர்பில் மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு செழுமையாக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் விவசாயிகள் மற்றும் பல்கலைக்கழக சமூகம் என அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஆலோசனைகள் பெறப்படுகின்றது.

எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கொண்டு புத்தாண்டுக்கு முன்பதாக தீர்வுத்திட்ட வரைபு முழுமையாக்கப்படும்.

இதன்பின்னர் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் கையளிக்கப்படவுள்ளதுடன் வெளிநாட்டு தூதுவர்களிடமும் தீர்வு யோசனை முன்வைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts