Ad Widget

புத்தளத்தில் கரையொதுங்கிய இந்திய மருத்துவ கழிவுப்பொருட்கள் தொடர்பில் ஆய்வு!

புத்தளம் கடற்பரப்பில் ஒதுங்கியுள்ள இந்திய மருத்துவ கழிவுபொருட்கள் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது.

புத்தளம் கரையோர பகுதிகளான கண்டத்தீவு, சின்னப்பாடு, பெரியபாடு மற்றும் பள்ளிவத்தபாடு ஆகிய பிரதேசங்கள் உள்ளிட்ட இன்னும் பல பிரதேசங்களில் அண்மைய நாட்களாக மருத்துவ கழிவுப்பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன. இவை தொடர்பாக மக்கள் சந்தேகம் வெளியிட்டு வந்த நிலையில், அவை இந்திய மருத்துவ கழிவுப்பொருட்கள் என்பதை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை நேற்று (திங்கட்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச மக்கள் கடல்சார் சூழல் பாதுபாப்பு அதிகார சபையிடம் முறைப்பாடு செய்துள்ளதாக, அதன் தலைவர் தெரனி பிரதீப் குமார குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள நீரோடைகளில் கொட்டப்பட்ட குறித்த மருத்துவ கழிவுப்பொருட்கள் காற்றினால் இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கியிருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், எவ்வாறாயினும் எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி அவற்றை தொடவேண்டாமென கோரியுள்ளார். அத்தோடு, கடற்கரையில் நீராடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த மருத்துவ கழிவுப்பொருட்கள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts