புதிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் அதில் இனம் மற்றும் மதம் பற்றிய விவரம் வெளிப்படுத்தப்படாது என்று பதிவாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பிறப்புச் சான்றிதழில் “இலங்கையர்” என்று மட்டுமே இடம்பெறும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாய் – தந்தையரின் திருமண விவரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாட்டின் அனைத்து குடிமக்களின் புதிய பிறப்புச் சான்றிதழ்களில் ‘இலங்கையர்’ என குறிப்பிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிறப்பின் போது ஆள் அடையாளத்தை உறுத்திப்படுத்தும் வகையில் வழங்கப்படும் 12 இலக்கங்களே பிற்காலத்தில் தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்குவதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக 15 வயதை நிறைவு செய்த ஒருவருக்கு குறித்த 12 இலக்கங்களிலேயே தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே சுட்டிக்காட்டினார்.
மேலும், டிஜிட்டல் முறைமையிலான புதிய பிறப்புச் சான்றிதழ்களை பொதுத் தேர்தலின் பின்னர் விநியோகிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, இதுவரை காலமும் பிறப்புச் சான்றிதழில் இலங்கை தமிழர் என்று குறிப்பிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.