ஆட்சி மாற்றத்துடனான புதிய அரசை கொண்டு வருவதற்கு தாமே காரணமென கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது புதிய அரசு ஏமாற்றி விட்டதாக கூறிவருகின்றமை மக்களை ஏமாற்றும் அவர்களின் மற்றுமொரு தந்திரோபாயம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
அளவெட்டி கிழக்கு கும்பலை கிராம மக்களை சந்தித்து நேற்றைய தினம் (04) கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இங்குள்ள மக்கள் விடுத்த கோரிக்கைகள் நியாயமானவை என்பதுடன் அவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டியதும் அவசியமானது. இந்நிலையில் நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் எமக்கு அரசியல் பலத்தை தருவார்களேயானால் முன்னுரிமையடிப்படையில் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்.
எமது கட்சியின் நோக்கம் நடைமுறை யதார்த்த வழிமுறையில் எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்பதுடன் அது நிரந்தரமான தீர்வாக அமைய வேண்டுமென்பதே எமது நோக்காகும்.
எனவே, நடைபெறவுள்ள தேர்தலை சரியான முறையில் பயன்படுத்தி தொடர்ந்தும் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எமக்கு மக்கள் முழுமையான ஆதரவு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே குறிப்பாக குறித்த பகுதி கிராமத்தின் பொதுஅமைப்புகளுக்கு ஏற்கனவே டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கியிருந்த நிதியுதவிக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ஐங்கரன் உடனிருந்தார்.