Ad Widget

பில்லி, சூனியம் செய்தவர் விளக்கமறியலில்

பில்லி, சூனியம் வைப்பதாகக் கூறி பொதுமக்களிடம் பெருமளவு பணத்தை பெற்று வந்தவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை புதன்கிழமை (02) உத்தரவிட்டுள்ளார்.

பில்லி, சூனியம் மீது நம்பிக்கையுடையவர்கள் குறித்த நபரிடம் சென்றால் அவர்களிடமிருந்து சிறிய தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு மருந்து ஒன்றை வழங்குவதாகவும் அந்த மருந்தை உண்கொண்டவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புக்கள் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், அதனை நிவர்த்தி செய்துகொள்ளும் பொருட்டு, மீண்டும் அவரிடம் சென்ற பின்னர், அதனை நிவர்த்தி செய்வதாகக் கூறி மற்றுமொரு மருந்தை வழங்குகின்றாராம். இவ்வாறு இரண்டாவது முறையாக கொடுக்கப்படும் மருந்துக்கு அதிகளவு பணம் அறவிடப்படுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று, மருந்தை உட்கொண்ட ஒருவர் தனது கண்பார்வையை இழந்துள்ளதாகவும் அவரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த நபர் கைது செய்யப்பட்ட பின்னர், அவரால் பாதிக்கப்பட்ட பலரும் முறைப்பாடு செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அவருக்கு கோண்டாவில் மற்றும் சங்கானைப் பகுதிகளில் இரண்டு மனைவிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளது.

Related Posts