Ad Widget

பிரான்ஸ் குடியுரிமை பெற்ற யாழ். வாசிகளுக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் பிரான்ஸ் நாட்டில் சட்டபூர்வமான பிரஜைகளாக இருந்தால் அவர்கள் இலங்கையில் உள்ள தமது குடும்ப அங்கத்தவர்களையும் தங்களுடன் பிரான்ஸுக்கு அழைக்க விரும்பினால் அந்தக் கோரிக்கை பற்றிச் சாதகமாகப் பரிசீலிக்கப்படும். இவ்வாறு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரைன் றொடிச்சன், யாழ். மாவட்ட அரச அதிபருடனான சந்திப்பின் போது தெரிவித்தார். 

 பிரான்ஸ் தூதுவருக்கும் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
பிரான்ஸ் தூதுவர் குடாநாட்டின் சகல விடயங்கள் தொடர்பாக அறிவதிலும் முழுமையாக கவனம் செலுத்தினார். இங்கு நேரடியாக இடங்களைப் பார்வையிட்ட அவர் அரசின் அபிவிருத்திப் பணிகள் இடம் பெற்ற போதும் தனியார் கட்டமைப்புகள் ஊடான அபிவிருத்திகள் இடம் பெறவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன? மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் தொடர்பாக மக்களிடமிருந்து ஏதாவது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளனவா என்றும் அவர் என்னிடம் கேள்விகளை எழுப்பினார்.
அத்துடன் பிரான்ஸில் சட்டரீதியான பிரஜையாக உள்ள இலங்கையர்கள் இங்கு தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ விரும்பினால் விண்ணப்பிக்கலாம். அதனைத் தமது தூதரகம் சாதகமாகப் பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தார் என்றார் அரச அதிபர்.

Related Posts