Ad Widget

பிரபாகரன் எப்போது இறந்தார்?- சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் எனக்கூறும் அரசாங்கம், அவர் எப்போது கொல்லப்பட்டார் மற்றும் அவரது சடலத்துக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் எந்தத் தகவலையும் இதுவரையும் வெளியிடவில்லை’ என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது. தகவல் அறியும் சட்டமூலத்துக்கு வடமாகாண சபை பரிந்துரை வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இதனை நான் கேட்டால், ‘அது தேசிய பாதுகாப்பு விடயம். சட்டமா அதிபர் திணைக்களத்தின் தகவல்’ என பதில் சொல்லமாட்டார்கள்.

அரசாங்கம் தன்னைத் தானே காப்பாற்றும் முயற்சிகளுக்கு நாங்கள் துணைபோகக்கூடாது. அனைத்து தகவல்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும் போது, அதனை 3 வருடங்களுக்குள் நிறைவேற்றுவோம் எனச் சொல்லி கொண்டு வந்தார்கள். ஆனால், அது நீடித்துக்கொண்டே செல்கின்றது என்றார்.

‘மரண தண்டனை இலங்கைச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது எனக்கூறிவிட்டு, குட்டிமணி, ஜெகனுக்கு மரணதண்டனை அறிவித்தனர். சட்டமூலம் கொண்டு வருவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்டமையால், அதனைத் தடுக்க முடியாது என்றனர்.

நாங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றோம். தகவல் அறியும் சட்டமூலத்தை தனித்தனியாக பிரித்து, விவாதித்து பரிந்துரைகளை வழங்குவோம். அதற்கான கால அவகாசத்தையும் எடுத்துக்கொள்வோம்’ எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts