Ad Widget

பிரபாகரனின் மரணம் தொடர்பில் எவராலும் சரியான தகவலைக் முடியாது! – கே.பி. தெரிவிப்பு

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் எவராலும் சரியான தகவல்களை வெளியிடமுடியாது” – என்று விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றி தோண்டித் தேடுவதை விடவும், அரசுடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிரபாகரனின் இறப்புப் பற்றி துல்லியமாகக் கூற எவராலும் முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, பிரபாகரனுடன் இருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எவரும் உயிருடன் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிலருடன் தாம் தொடர்பு கொண்டு கள நிலைவரங்களை அறிந்துகொண்டிருந்தபோதிலும், நந்திக்கடல் பகுதியில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எவரும் உயிருடன் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பிரபாகரன் எவ்வாறு உயிரிழந்தார் எனத் தற்போது கூறுவது சாத்தியப்படாத விடயமாகும். மூன்று தசாப்தகாலமாக நீடித்த யுத்தம் காரணமாக இலங்கையர்கள் பாரியளவில் அழுத்தங்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்க நேரிட்டது என்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தானே பிரபாகரனுடன் அதிகளவு தொடர்புகளைப் பேணி வந்ததாகவும், தன்னாலேயே பிரபாகரனுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் குறிப்பிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் இல்லமொன்றைத் தன்னார்வ அடிப்படையில் நடத்திச்செல்வதாகவும் அதற்காக நேரத்தைச் செலவிட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், மாறாக அரசியல் தேவைகளுக்காக தேவையற்ற கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியம் தமக்குக் கிடையாது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts