தமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இராணுவத்தினரை தொடர்ந்தும் நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் மற்றொரு பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்டமுடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் சமஷ்டி பிரிவினை அல்ல என்பதை வலியுறுத்தியவர் மத்திய அரசாங்கத்தின் நேரடித்தலையீடுகளால் வடக்கு மாகாணசபை தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக எழுத்தாளர் குசால் பெரேராவின் நூல் வெளியீடும் திறந்த கலந்துரையாடலொன்றும் கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோது பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தேசத்தை கட்டியெழுப்புதல் தொடர்பாக அவதானம் செலுத்துகையில் இலங்கை என்றொரு தேசமுள்ளது. அதனை கட்டியெழுப்பவேண்டிய தேவை எமக்கு உள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பாக நாம் கலந்தாலோசிக்கினறபோதும் நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பாகவே நாம் தற்போது ஆலோசிக்கின்றோம்.
பல்வேறுபட்ட வேறுபாடுகளுக்கு மத்தியில் நாட்டினை கட்டியெழுப்புவது தொடர்பாக தற்போது இங்கு பேசப்படுகின்றது. இலங்கைத்தேசத்தைக் கட்டியெழுப்புகின்றோம் என்ற நிலைப்பாட்டில் நாம் இணக்கம் கொண்டிருக்கவில்லை.
தேசத்தை கட்டியெழுப்புவதானது ஒரு பாரிய கட்டடமொன்றினை பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் கட்டியெழுப்புவதற்கு சமனானதாகும். ஆதற்கு பல்வேறு தரப்பினரின் பங்களிப்புக்கள் அவசியமாகின்றன. அதனைப்போன்றே தேசத்தைக் கட்டியெழுப்புதலையும் கூறமுடியும்.
தேசத்தைக் கட்டியெழுப்புதலும் நல்லிணக்கமும் தொடர்பாக நோக்கும்போது சிதைவுகளை கொண்டிருக்கும் கட்டடமொன்றை மீளவும் நிர்மாணிப்பதற்குச் சமமானதாகும்.