Ad Widget

பாலின் கொள்வனவு விலை ரூ72!!, 14 மாதங்கள் நான் பால் விற்பனை செய்தேன் : அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக பாலின் கொள்வனவு விலையை 72 ரூபாக உயர்த்த வடமாகாண சபை முடிவெடுத்துள்ளதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 101ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
உள்ளூர் பால் உற்பத்தியினை ஊக்குவிக்கவும் , உள்ளூர் பால் உற்பத்தி உள்ளூர் மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் யாழ்.கோவின் பால் கொள்வனவு விலையை 72 ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் போது விற்பனை விலையில் மாற்றம் செய்யவில்லை என தெரிவித்தார்.

அதன் போது முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கொள்வனவின் போது பாலின் அடர்த்தியினை மானி ஊடாக பரிசோதித்தே கொள்வனவு செய்ய வேண்டும். குறித்த அடர்த்தி இருந்தால் மாத்திரமே கொள்வனவு விலை 72 ரூபாவாக நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த அவைத்தலைவர் நான் பாடசாலை கல்வியை முடித்த கையோடு 14 மாதங்கள் பால் விற்பனை செய்தேன். அப்போதே பாலின் அடர்த்தி பரிசோதித்தே பாலினை கொள்வனவு செய்வார்கள்.

பாலின் அடர்த்தியை பரிசோதிக்க வேண்டியது பாலினை கொள்வனவு செய்பவரின் கடமை. பாலுக்கு தான் கொள்வனவு விலை 72 ரூபாய். அடர்த்தி குறைந்தால் அது பாலில்லை என தெரிவித்தார்

Related Posts