பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பங்கெடுக்கச் செய்வதற்கு வலியுறுத்த வேண்டுமென தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகைதந்த தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோசவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் அவர்கள் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இதன்போது, கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் இலங்கையில் நீண்டகாலமாக தீர்வு காணப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமே உரிய தீர்வினை காணமுடியுமென நான் திட்டவட்டமாக நம்புகின்றேன்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இப்பிரச்சினை தொடர்பில் உரிய கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நாம் பலமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர்கள் இவ் அழைப்புக்களை தட்டிக்கழித்தே வருகின்றனர். கடந்த காலங்களிலும் இவ்வாறு கிடைக்கப்பெற்ற நல்லவாய்ப்புக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தவற விட்டிருந்தனர் என்பதையும் ரமபோச அவர்களிடம் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.
கடந்த காலங்களைப் போல் வாய்ப்புக்களை தவறவிட்டு எமது மக்களை அழிவுக்கும் துன்ப துயரங்களுக்குள் தள்ளிவிடாது பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைவதற்கு அவர்களை வலியுறுத்த வேண்டுமெனவும் கூறியதோடு, தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெளிவுபடுத்தினார்.