பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைத்து தமிழ் மக்களும் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வியாழக்கிழமை (30) கருத்து கூறியதாவது,
‘புதன்கிழமை (29) இடம்பெற்ற இந்த அனர்த்தம் காரணமாக லயன் குடியிருப்பில் வாழ்ந்து வந்த மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் உயிரிழந்தவர்களுக்கு கூட்டமைப்பு இரங்கல் தெரிவிக்கின்றது. அத்துடன், பாதிப்படைந்து நிர்க்கதியில் நிற்கும் மக்களுக்கு உதவிகள் புரிய வேண்டும். உதவி புரிவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
யாழ், கொழும்பு தமிழ் வர்த்தகர்கள் இதற்கு முன்வரவேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரிவதினூடாக அம்மக்களை அந்த பாதிப்புக்களில் இருந்து மீட்கமுடியும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.