காரைநகர் ஊரிப் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியினை கடற்படைச் சிப்பாய் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காரைநகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கண்டனப் போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது.
காரைநகர்ப் பிரதேச மக்களினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன், சிவஞானம் சிறிதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதியிடம் கொடுப்பதற்கென மகஜர் ஒன்று காரைநகர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் ஆ.தட்சணாமூர்த்தியிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிறுமி துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு யாழ்., சிறுவர் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.