காரைநகர் ஊரிப் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியை கடற்படைச் சிப்பாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டம் நடத்தப் போவதாக வடமாகாண சபை அனந்தி சசிதரன் இன்று வியாழக்கிழமை (17) தெரிவித்தார்.
பாடசாலை செல்லும் இச்சிறுமியினை மேற்படி கடற்படைச் சிப்பாய், ஏலாலை கடற்படை முகாமிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிறுமியின் பெற்றோர்களினால் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (15) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படைச் சிப்பாய் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை எனவும் ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து கண்டனப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாகவும், இதன் மூலமே வடபகுதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அநீதிகளினை உலகுக்கு எடுத்துக்காட்ட முடியும் எனவும் அனந்தி மேலும் தெரிவித்தார்.