Ad Widget

பாடசாலைக்கு சினிமா பாணியில் ஆயுதங்களுடன் வந்து ரவுடிகள் அட்டகாசம்.

யாழ்.நகரை அண்மித்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நேற்று பட்டப்பகலில் வாள்கள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் கும்பல் ஒன்று மாணவர்கள், ஆசிரியர்களை கடுமையாக அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

பாடசாலையில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றது. இந்நிலையில் மோதலுடன் சம்பந்தப்பட்ட ஒரு மாணவர் குழுவே மற்றைய குழு மீது தாக்குதல் நடத்துவதற்காக ரவுடிகள் குழு வரவழைத்ததாக கூறப்படுகின்றது.

நேற்று பாடசாலை நடைபெற்றுக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்த 15 இற்கும் மேற்பட்ட இளைஞர்குழு பாடசாலைக்கு முன்பாக வந்து இறங்கியது. அவர்களின் கைகளில் வாள்கள், கத்திகள், பொல்லுகள் மற்றும் இரும்புக் கம்பிகள் போன்ற ஆயுதங்கள் காணப்பட்டன.
ஆயுதங்களைக் காட்டி வீதியில் நின்ற பொதுமக்களை இந்தக் கும்பல் அச்சுறுத்தியது. சிலர் மீது தாக்குதல் நடத்தவும் அவர்கள் முயன்றனர்.

சிறிது நேரம் பாடசாலைக்கு முன்பாக நின்று அட்டகாசம் புரிந்த இக்கும்பல் பாடசாலையில கற்றும் மாணவர்கள் சிலருடைய பெயர்களையும் கூறி அழைத்து அச்சுறுத்தினர்.

இதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ரவுடிக் கும்பலைச் சேர்ந்தோர் பாடசாலைக்கு அருகில் உள்ள சந்தியால் நான்கு பக்கங்களிலும் பிரிந்து சென்றனர்.

இதேவேளை ரவுடிகள் பாடசாலை முன் ஆயுதங்களுடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்சிகள் அங்குள்ள இரகசிய கண்காணிப்புக் கமெராவில் பதிவாகியிருக்கக்கூடும் எனக் கருத்தபடுகிறது. பதிவான காட்சிகளை ஆராய்ந்தால் இவ் இளைஞர் குழுவினரை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts