Ad Widget

பாடசாலைக்கு அருகில் சிகெரட்டுகள், புகையிலை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யத் தடை

நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில், அதாவது, பாடசாலையிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவுக்குள், சிகெரட்டுகள் மற்றும் புகையிலை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்போவதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அத்துடன், சுண்ணாம்பு மற்றும் பாக்கு விற்பனைக்கு எதிராகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க, நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் ஏற்பாட்டில், பத்தரமுல்லையில் அமைந்துள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்ற, புகைப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல் தொடர்பான ​கலந்துரையாடலின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “பாடசாலைகளை அண்மித்த பிரதேசங்களில், மதுபானங்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, புகையிலை உற்பத்திப் பொருட்கள் விற்பனையைத் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என்றார்.

இதேவேளை, “இலங்கையின் கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்த பொருட்களில், சுண்ணாம்பும் பாக்கும் காணப்படுகின்றது. இருப்பினும், இவற்றைப் பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், அவற்றுக்கு எதிராகவும், கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்று, அமைச்சர் மேலும் கூறினார்.

Related Posts