வடமாகாணத்திலுள்ள அரச மற்றும் தனியார் பஸ்களுக்கான சீரான நேசசூசியை அறிமுகப்படுத்தி இரு தரப்பினருக்கும் இடையில் உள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். நாவலர் வீதியிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
தனியார் மற்றும் அரச பஸ்கள், நேரசூசியை கடைப்பிடிக்காது போட்டியான முறையில் செயற்படுகின்றனர். இதனால் அவர்களும் பொதுமக்களும் நன்மை அடைவதில்லை. மாறாக பிரச்சினைகள் உருவாகி, கல்லெறி, அடிதடி, தகாத வார்த்தைப் பிரயோகங்கள் என்பனவே இடம்பெறுகின்றன. இவர்களின் சண்டையால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசிய தேவையுள்ளது.
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலுள்ள போக்குவரத்துச் சேவைகளை சீர் செய்வதற்காக, தனித்தனியாக கூட்டங்களை கூடி அதில் குழுக்களை அமைத்துள்ளேன். மாவட்டத்தின் பிரதம கணக்காளர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உறுப்பினர், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸார் உள்ளடங்கலாக 9பேர் கொண்ட குழுக்கள் ஒவ்வொரு மாவட்;டத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்தில் மட்டும் 13பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு மாவட்ட மட்டத்தில் கூடி கலந்துரையாடி, தனியார் பஸ் மற்றும் அரச பஸ் சேவைகள் சம்பந்தமான நேரசூசியை தயாரித்து வெளியிடுவார்கள். இந்த நேரசூசியின் அடிப்படையில் எதிர்காலத்தில் சேவைகள் நடைபெறவேண்டும்.
இதில் குழப்பங்கள் ஏற்படுமாக இருந்தால் அத்தகையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாகாண மட்டத்திலும் கலந்துரையாடப்பட்டு மாவட்டங்களுக்கு இடையேயான நேரசூசி ஒழுங்கமைக்கப்பட்டு பஸ் சேவைகள் இடம்பெறும் என்றார்.