Ad Widget

பல்கலை. மாணவர்கள் படுகொலை: அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகததால் விசாரணைகள் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணை அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகததால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று ஒத்திவைத்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த 5 சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபர் எக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து அரச சாட்சிகளாக மாற்றுவதற்கு சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று அறிக்கையிட்டனர்.

மேலும் கடமைக்கு பொறுப்பாகவிருந்தவரான முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, சுருக்கமுறையற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று (10) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் தோன்றினர். சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முன்னிலையாகினர்.

வழக்கு நேற்று காலை திறந்த மன்றில் கூப்பிடப்பட்ட போது, அரச சட்டவாதி முன்னிலயாகததால் விசாரணை பின்நகர்த்தப்பட்டது. எனினும் மீளவும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகவில்லை.

“யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் அரச சட்டவாதி முன்னிலையாகி உள்ளதால் நீதிவான் நீதிமன்றில் முற்பட முடியவில்லை. வழக்கை வேறு ஒரு திகதிக்கு ஒத்திவைக்க மன்று அனுமதியளிக்கவேண்டும்” என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விண்ணப்பம் செய்தனர். அதனை ஆராய்ந்த மன்று வழக்கை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைத்தது.

இந்த வழக்கின் விசாரணைகள் மூன்று மாதங்களுக்குள் முடிவுறுத்தப்படும் என்று ஜனாதிபதியால்உறுதியளிக்கப்பட்ட நிலையில் வழக்குத் தொடுனரான அரச தரப்பினரால் 25 மாதங்களுக்கு மேல் இழுத்தடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts