காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் பருத்தித்துறை பொலிஸ் நிலைய புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதி இன்று காலை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனின் அழைப்பின் பேரில் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாறப்பனவினால் திறந்து வைக்கப்பட்டது.
1938ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கான, புதிய கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றிருந்தது. அதன்படி அதன் நிர்மானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த திறப்பு விழாவின்போது அமைச்சர் திலக் மாறப்பனவிற்கு செங்கம்பள வரவேற்புடன் கூடிய பொலிஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய நிர்வாகக் கட்டிடத் தொகுதிக்கான் நினைவுக்கல் திறக்கப்பட்டது.பின்னர், மங்கள விளக்கேற்றப்பட்டு புதிய கட்டிடத்தொகுதி நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்தன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.