தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிற்கு மரணதண்டனை விதித்து குடாநாடெங்கும் கொடும்பாவிகள் தொங்கவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரி யாழ்.வந்து திரும்பியுள்ள நிலையில் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் யாழ்.நகரென இக்கொடும்பாவிகள் இன்று இரவோடிரவாக தொங்கவிடப்பட்டுள்ளதாக கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு இளைஞரணியினை சேர்ந்தவர்களென தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இளைஞர் குழுக்களே மரணதண்டனை எச்சரிக்கையுடன் இக்கொடும்பாவிகளை கட்டித்தொங்கவிட்டிருந்தததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்கள் 30 பேர் முதல் 40 பேர் வரையிலிருந்தனர்.தமிழரசுக்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக அவர்கள் கோசங்களை எழுப்பினர்.
மக்களது உணர்வுகள் புரியாதவர்களா தலைவர்கள்? தன்மான இனத்தை விற்காதேயென அவர் கோசங்களை போட்டுவிட்டு கலைந்து சென்றிருந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர். கூட்டமைப்பு சார்பு உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிலரும் இளம் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் அக்குழுவினிலிருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமராட்சியில் கரவெட்டி, மூத்தவிநாயகர் கோவிலடியில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனினது அலுவலகமென திறக்கப்பட்ட தமழரசுக்கட்சி அலுவலகம் மற்றும் கைதடியிலுள்ள வடமாகாணசபை வளாகத்தின் முன்பும் அதே போன்றே யாழ்நகரினில் மார்டின் வீதியினில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகமென சுமந்திரனது கொடும்பாவிகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
அவற்றினில் தமிழின துரோகியென சுட்டிக்காட்டப்பட்டு சுலோக அட்டைகளும் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது.
முன்னதாக யாழ்.நகரில் நடைபெற்ற காணாமல் போனோரது போராட்டமொன்றினில் சுமந்திரனின் கொடும்பாவி தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.
இவ்விவகாரம் தமிழரசுக்கட்சியின் தலைமையிடையே கடும் அதிர்வலைகளை தோற்றுவித்திருந்ததுடன் அனந்தியுள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இத்தகைய மிரட்டல்கள் எதனையும் பொருட்படுத்தாது வடமராட்சி,தென்மராட்சி மற்றும் வலிகாமம் என இளைஞரணிகள் ஓரே நேரத்தினில் தனித்து தனித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளமை தமிழரசுகட்சி வட்டாரங்களிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. அதிலும் கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள்,உறுப்பினர்கள்,ஆதரவாளர்களென திரண்டமை எதிர்காலம் தொடர்பினில் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
தம்மை வழி நடத்தியவர்கள் அரசியல் கட்சிகளிகளின் தலைவர்கள் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.