Ad Widget

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது குறித்து புதிய வழிகாட்டல்கள் அறிமுகம்?

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது தொடர்பில் புதிய வழிகாட்டல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைதுகள் தொடர்பில் புதிய சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே எதிர்வரும் காலங்களில் கைது செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கைது செய்வதற்காக செல்லும் நபரோ, அல்லது நபர்களோ, கைதுசெய்யப்படும் நபர் மற்றும் அவரது உறவினர்களுக்கு தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யும் நபரின் பதவி எந்தப் பிரிவு அவரது பெயர் விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும், என்ன காரணத்திற்காக குறித்த நபர் செய்யப்படுகின்றார் என்பது அவரது மனைவி அல்லது, அல்லது கணவன் பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு அறியத்தர வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யும் அதிகாரியின் பெயர், எந்த இடத்தில் எந்த நேரம், எந்த திகதியில் கைது செய்யப்படுகின்றார், எந்த இடத்தில் தடுத்து வைக்கப்படுகின்றார் என்பது பற்றிய விபரங்களையும் வெளியிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் நபரினால் பயன்படுத்தும் மொழியில் இந்த விபரங்கள் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் போது கைது செய்யப்படும் நபர் தனித்து இருந்தால், அவர் தன்னைப் பற்றிய தகவல்களை உறவினர்களிடம் அல்லது நண்பர்களிடம் அறிவிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்படுவது என்பது பலவந்த கடத்தல்கள் காணாமல் போதல்களுக்கு நிகரான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts