Ad Widget

‘பனாமா பேப்பர்ஸ்’ உலகை அதிர வைத்துள்ள நிதி மோசடி!! ராஜபக்ஷவினருக்கு தொடர்புள்ளதா?

விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

panama-papers

சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் இணைந்தே இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர்.

வொஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கமே (International Consortium of Investigative Journalism) ஞாயிறன்று (3) இந்த தகவல்களை “பனாமா பேப்பர்ஸ்” எனும் பெயரில் வெளியிட்டுள்ளது.

கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்கள் பனாமா நாட்டில் எவ்வாறு பதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்களே கசிந்துள்ளன.

மொசாக் பொன்சேகா நிதி நிறுவனம் 1977 இல் இருந்து 2015 டிசம்பர் வரையில் தங்கள் சேவைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பனாமா நாட்டடைச் சேர்ந்த மொஸாக் பொன்செகா நிறுவனத்திலிருந்தே இந்த தகவல்கள் கசிந்துள்ளன. மொஸாக் பொன்சேகா நிறுவனமே இந்த மோசடிகளுக்குத் துணைபோய் பல தசாப்தங்களாக வரிஏய்ப்பு மற்றும் சொத்து பதுக்கல்கள் மூலமாக தமது வாடிக்கையாளர்கள் பலரது சொத்துக்களை பதுக்க உதவி புரிந்துள்ளது.சுமார் 11 மில்லியன் தகவல் தரவுகள் இதுவரையில் திரட்டப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், கால்பந்து வீரர் மெஸி, எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபிய முன்னாள் ஜனாதிபதி கடாபி உள்ளிட்ட பல பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.

மொத்தமாக 140 இந்நாள் மற்றும் முன்னைநாள் அரசியற் பிரபலங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பிரச்சினை காரணமாக ஐஸ்லாந்து பிரதமர் தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டிய நிலமையும் ஏற்பட்டுள்ளது.

ஆனால்,மொசாக் ஃபொன்சேகா நிறுவனம் , தாங்கள் 40 ஆண்டுகளாக இயங்கிவருவதாகவும் ஒருபோதும் இத்தகைய மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறது.

மேலும், எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் நிதி மோசடிக்காரர்கள் அனைவரின் விபரங்கள் வெளியிடப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இந்திய பிரபலங்கள் பலரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக இந்த பட்டியலில், பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவருடைய மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். நிறுவனத்தின் கே.பி. சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 9 பேர், கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலோ டயர் புரோமோட்டர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா மற்றும் டெல்லியைச் சேர்ந்த லோக்சத்தா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் ஆகியோர் உட்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன.

மேலும், ஈரான், சிம்பாப்வே மற்றும் வட கொரியாவைச் சேர்ந்த 33 நபர்கள் அமெரிக்காவின் தடைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் ஒருவர் வட கொரியாவின் அணுவாயுத நடவடிக்கையுடன் தொடர்புடையவர் எனவும் அறியப்படுகின்றது.

இந்த கணக்குகள் தொடர்பான தகவல்களை கொண்டு ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை உலகின் இரகசிய நிறுவனங்கள் என்ற தலைப்பின் கீழ் வரைபடமொன்றை தயாரித்துள்ளது.
இதில் இலங்கையும் உள்ளடங்குவதுடன், மூன்று நிறுவனங்களுக்கு சொந்தமான மூன்று வாடிக்கையாளர்கள் மற்றும் 22 பங்குதாரர்கள் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் உட்பட உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களின் பெயர்கள் குறித்த கணக்கில் உள்ளடங்குகின்றதா என உடனடியாக கண்டுபிடிக்க அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

panama-papers-2

Related Posts