Ad Widget

பதுளை மக்களுக்கு வடமாகாண சுகாதார அமைச்சு மருத்துவ உதவி

இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சபிக்கப்பட்ட இனமாகவே வாழ்ந்து வருகின்றோம்.அரசியல் ரீதியாக மட்டுமன்றி இயற்கையாலும் கொடூரமாக பாதிப்பிற்குள்ளாக்கப்பட்ட இனமாக வாழ்ந்து வருகின்றோம். இம் மக்களின் துயரில் வடமாகாண சுகாதார அமைச்சும் ஊவா மாகாண சுகாதார அமைச்சு ஊடாக உதவிகளைச் செய்ய தயாராகவுள்ளது.

saththeyalingam

இவ்வாறு தெரிவித்துள்ளார் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம். நேற்றுமுன்தினம் காலை பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தம் தொடர்பாக வடமாகாண அமைச்சால் விடுக்கப்பட்ட அனுதாபச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கடந்த 2009 இல் முடிவுக்கு வந்த செயற்கை அனர்த்தத்தால் (யுத்தம்) பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். உலகையே உலுக்கிய இந்த மறக்கமுடியாத துயரச்சம்பவம் முடிவுற்று ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் மீண்டுமொரு இயற்கை அனர்த்தம் பதுளை மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது.

2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையிலும் ஆயிரக்கணக்காணவர்களை இழந்தோம். இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கமான எமது மலையக உறவுகள் என்றுமே அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர். தேர்தல் காலங்களில் மட்டும் அரவணைக்கபட்டு பின்னர் அநாதாரவாக விடப்படுகிறார்கள். இந்த நிலையில்மண்சரிவு இயற்கை அனர்த்தம் இவர்களை மேலும் கடுமையாக பாதிப்புள்ளாக்கியுள்ளது.

பல நூற்றுக்கணக்கானவர்களை காவுகொண்ட இந்த பேரனர்த்தத்தால் ஏறக்குறைய ஒரு கிராமமே மண்ணிற்குள் புதையுண்டுள்ளது. இழப்புகளின் ரணங்களை உணர்ந்தவர்கள் நாம். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் துயரத்தில் வடக்கு மாகாண மக்களாகிய நாம் பங்குகொள்கின்றோம். சுகாதார அமைச்சர் என்ற வகையில் ஊவா மாகாண சுகாதார அமைச்சினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ ரீதியிலான உதவிகள் வழங்க தயாராவுள்ளோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Posts