Ad Widget

பணம் இல்லாததால் இரு நாட்கள் வைத்தியசாலையில் காத்திருந்த சடலம்!

குடும்பத்தில் நிலவும் வறுமையால் இறந்தவரின் சடலம் இரு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது எனக் கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு – மல்லாவி – பாலையடியைச் சேர்ந்தவரின் சடலமே வீட்டின் வறுமையால் இவ்வாறு வைத்தியசாலையிலேயே காத்துக்கிடந்தது.

காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர் கடந்த 20 ஆம் திகதி மரணமானார்.

மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். மரண விசாரணை முடிந்த பின்னரும் சடலத்தை உறவினர்களால் கொண்டு செல்ல முடியவில்லை.

அவர்களிடம் பணம் இல்லாததால் இரு நாட்கள் வைத்தியசாலையில் சடலம் காத்திருக்க வேண்டியிருந்தது. உறவினர்களிடம் கடன்பட்டே சடலத்தை அவர்கள் சொந்த இடத்துக்குக் கொண்டு சென்றனர் என மேலும் தெரிய வந்தது.

Related Posts