பட்டதாரிகளின் பங்களிப்பு எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக அவசியமானது என்பதனை உணர்ந்து மிக விரைவில் வேலைவாய்ப்பினை வழங்க வேண்டியது அரசினதும், வடமாகாண சபையினதும் தார்மீக பொறுப்பு என சர்வமத குழுவின் தலைவர் வண பிதா. ஜெயக்குமார் அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 58 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாக சர்வமத குழுவினர் நேற்று திங்கட்கிழமை பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
அந்த சந்திப்பின் நிறைவில், பட்டதாரிகளினால் சர்வமத குழுவினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
பட்டதாரிகளின் போராட்டம் நியாயமான போராட்டம். அவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்த போது, அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதில் எந்தவித சந்தேகமும் எமக்கு இல்லை என அவர் குறிப்பிட்டார்.
பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டியது, அரசாங்கத்தினதும், வட மாகாண சபையினதும் தார்மீக பொறுப்பு. 3 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகளின் உழைப்பும் பங்களிப்பு தேசிய பொருளாதாரத்திற்கு, நாட்டிற்கும் இல்லாமை போவதையிட்டு மனவருத்தம் அடைகின்றோம்.
இவர்களின் உழைப்பும் பங்களிப்பும் எமது தேசிய பொருளாதாரத்திற்கு பயன்படாமல் வீண்விரயமாக்கப்படுகின்றது.
இந்த பட்டதாரிகளின் கோரிக்கைகளை அரசாங்கமும், வடமாகாண சபையும் கவனத்தில் எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.