Ad Widget

படையினரின் காணி அபகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் சுமார் 60 ஏக்கர் காணியும், ஆனைக்கோட்டை பகுதியில் 16 பரப்பு காணியும் படையினரின் தேவைகளுக்காக கையகப்படுத்தும் வகையில் இன்று அளவீடு செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகள், மற்றும் பொது அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்பினரை பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த சிவாஜிலிங்கம், ஸ்ரீலங்காவில் நல்லாட்சி நடப்பதாக மக்களை பிரமைக்குள் ஆழ்த்திவிட்டு மறுபக்கம் மக்களுடைய நிலங்களை படையினருக்காக கபடத்தனமாக சுவீகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என குறிப்பிட்டார்.

Related Posts