Ad Widget

படைக்கு தமிழர்களை சேர்க்கும் வேலையை முதலமைச்சர் கைவிடவேண்டும்: சிவமோகன்

அரசினால் தமிழருக்குரிய பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாத நிலையில் வடக்கின் முதலமைச்சர் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் படையில் இணையச்சொல்வது சர்ச்சைக்குரிய விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் படையில் இணைந்துகொள்ளுமாறு பகிரங்கமாகவே ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசினால் வட.மாகாண சபைக்குரிய அதிகாரங்களான காணி மற்றும் பொலிஸ் போன்றவை வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்துவரும் நிலையே தொடர்கின்றது என்பதை அனைவரும் அறிவர்.

13ம் திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இவ்வதிகாரங்கள் சிங்கள அரசினால் இன்னமும் முழுமையாக தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

அரசினால் தமிழருக்குரிய பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாத நிலையில் வடக்கின் முதலமைச்சர் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் படையில் இணையச்சொல்வது சர்ச்சைக்குரிய விடயமாகும்.

தமிழ் மக்களது பிரதிநிதிகளாகிய நாம் ஒற்றுமையாக, சிந்தித்து, நிதானமாக தமிழ் மக்களைத் தவறான வழியில் கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும் என்பதுவே எனது கருத்தாகும்” என சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

Related Posts