Ad Widget

நீதிமன்றத் தடையுத்தரவுக்கு மத்தியில் முல்லைத்தீவுக்குள் நுழைந்தது பேரணி- நீராவியடியில் தரிசனம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி திருகோணமலையில் இருந்து இன்று காலை ஆரம்பமான நிலையில் தற்போது முல்லைத்தீவு எல்லைக்குள் நுழைந்துள்ளது.

தற்போது வட மாகாண முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற சிவமோகன், சிவில் சமூக செயற்பாட்டாளர் இளங்கோவன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான து.ரவிகரன், சட்டத்தரணி சுகாஸ் ஆகியோர் இந்தப் பேரணியில் இணைந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதரன் மற்றும் இரா.சாணக்கியன் உள்ளிட்டோர் தொடர்ந்தும் பேரணியில் இணைந்துள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு எல்லையில் பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைக் காண்பிக்க முற்பட்டபோதும் அதனை மீறி குறித்த பேரணி முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோயிலை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் தரிசனத்தைத் தொடர்ந்து பேரணி முல்லைத்தீவு நகரை நோக்கிச் செல்கின்றது.

Related Posts