Ad Widget

நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 327 ஆக உயர்ந்தது

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 327 ஆக உயர்ந்தது.

இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் மதியம் இந்துகுஷ் மலைப்பகுதியில் பூமிக்கு கீழே 190 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் கடுமையாக இருந்தது.

குறிப்பாக, பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் சிட்ரால், சுவாத், சங்லா, திர், புனர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அங்கு நூற்றுக்கணக்கான கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் இடிந்து விழுந்தன. நில நடுக்கம் காரணமாக ஏராளமான இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

நில நடுக்கம் தாக்கிய சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் 180 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகி விட்டனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். பாகிஸ்தானில் மட்டும் 1,620 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

நில நடுக்கத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கியது. இந்த பணி 2–வது நாளாக நேற்றும் நீடித்தது.

அப்போது இடிபாடுகளில் இருந்து 9 பிணங்கள் மீட்கப்பட்டன. நேற்று முன்தினம் பாகிஸ்தானில் 228 பேர் பலியாகி இருந்தனர். இந்த எண்ணிக்கை நேற்று 237 ஆக அதிகரித்தது. கைபர் பக்துங்வா மாகாணத்தில் அதிகபட்சமாக 214 பேர் உயிரிழந்தனர்.

நில நடுக்கம் தொடர்ந்து ஏற்படலாம் என்ற பயத்தில் ஏராளமானோர் தங்களது வீடுகளுக்கு திரும்பாமல் நள்ளிரவு வீசிய கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் திறந்த வெளியிலேயே தங்கியிருந்தனர்.

இதனிடையே அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் நவாஸ்ஷெரீப், இஸ்லாமாபாத்தில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, மீட்பு பணிகளை துரிதப்படுத்தும்படி உத்தரவிட்டார்.

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தகார், நங்கார்கர், குனார், நுரிஸ்தான் ஆகிய மாகாணங்களில் இதுவரை 90 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டன. உயிருடன் மீட்கப்பட்ட 300 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. எனவே, பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் இதுவரை நில நடுக்கத்திற்கு 327 பேர் பலியாகி உள்ளனர்.

Related Posts