திருகோணமலை – நிலாவெளி கடற்கரையில் மீட்கப்பட்டிருந்தவரின் சடலம், விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவராக இருக்கலாம் என்ற அடிப்படையிலும் விசாரணைகளை நடத்துவதாக தமிழக கியூ பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆறாம் திகதி மீட்கப்பட்ட இந்த சடலம், சென்னையைச் சேர்ந்த பூமிதுரை என்ற ஒரு வாடகை வாகன சாரதி என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவரிடம் இருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையில் இருந்து இந்த தகவல் பெறப்பட்டது.
ஆனால் இந்த பெயரை கொண்ட சாரதி கோயமுத்தூர் பகுதியில் உயிருடன் இருக்கின்றமை தெரியவந்ததை அடுத்து, சடலத்தில் இருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையும் போலியானது என்று தெரியவந்துள்ளதாக தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இராமேஸ்வரம் பகுதியின் ஊடாக தமிழகத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட வேளையில் குறித்த நபர் கடலில் மூழ்கி இருக்கலாம் என்றும், அவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.