Ad Widget

நிரந்தர அரசியல்தீர்வு நோக்கிய நகர்வே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு! – சுமந்திரன்

நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை நோக்கிய நகர்வே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். நேற்றுமுன்தினம் குடத்தனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –

பல தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 6 வருடங்களுக்கு முன்பு மே மாதம் 19ஆம் திகதி முடிவுக்கு வந்தது. எமது மக்களும் எமது பிரதேசமும் பெரும் இழப்புக்களைச் சந்தித்தனர். யுத்தம் முற்றுப் பெற்றதே தவிர அடக்குமுறைகள் ஓயவில்லை. முட்கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டவர்களாய் தமது சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தவர்களால் தோல்வியைத் தழுவிய ஒரு சமூகமாய் நின்றனர். இன்னமும் சொல்லப்போனால் அப்போதைய அரசு எமது சமூகத்தை மறுபடியும் தலைநிமிர்த்த முடியாத நிலையில் வைத்திருப்பதை தமது கொள்கையாகவே கொண்டிருந்தது.

இப்படியானதொரு நிலைமையில் எமது சமூகம் சர்வதேசத்திடம் பல உபகாரங்களை எதிர்பார்த்தே தமது நிலைமையை தக்கவைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் விளைவாகவும் பல சர்வதேச சமூகங்களுடன் நடத்திய பேச்சுகள், ஜெனீவா நகர்வுகள் போன்ற தலையீடுகளால் அரசினால் நமது சமூகத்துக்கு நிரந்தரமாக ஏற்படவிருந்த பாதிப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டன.

இச்சூழ்நிலையிலேயே எமது மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தரவும் யுத்தம் ஏற்படுத்திய பேரழிவிலிருந்து மீள எமது சமூகத்தைக் கட்டியெழுப்பவுமே 2015 முற்பகுதியில் குறித்த காலத்துக்கு 2 வருடங்கள் முன்பாகவே இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை நாம் எதிர்பார்த்தோம். மைத்திரிபால சிறிசேனவுக்கான எமது நிபந்தனையற்ற ஆதரவானது மஹிந்தவின் பிரசாரத்தின் விளைவாக தோற்கக்கூடாது என்பதை உறுதிசெய்யவும், எமது சமூகம் ஒரு மேம்பாடடைந்த நிலைமையை அடைவதற்கு அவர் வழிவகுப்கார் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயாகும்.

இதனைக் கவனமாக ஆர்ப்பாட்டமற்ற செல்லாளுமையாலும் தலையீட்டாம் நாம் அடைந்து வருகிறோம். நாம் எதிர்பார்த்த மாற்றமானது ஜனவரி 8ஆம் திகதியே ஆரம்பித்ததுடன் இன்னமும படிப்படியாக நடைபெற்று வருகிறது. இது ஒருவர் நதியின் அக்கரையை அடைய வள்ளம் ஏறிய கதையைப் போன்றது. அக்கரையை வெற்றிகரமாக அடையவேண்டுமாயின் சூழ்நிலைகள் மோசமாக இருந்தபொழுதும் வள்ளத்தைத் தத்தளிக்கவிடக்கூடாது. மாறாக நாம் பயணிக்கும் திசை சரிதானா என்பதை மாத்திரம் உறுதிசெய்துகொள்ளல் வேண்டும்.

அண்மையில் வலிகாமம வடக்கில் 1000 ஏக்கர் நிலப்பரப்பு மட்டும் விடுவிக்கப்பட்டமை குறித்து நாம் முழுமையாக சந்தோஷப்பட முடியாவிடினும் கிழக்கின் சம்பூர் பிரதேச நில விடுவிப்பை நாம் அங்கீகரித்தே ஆகவேண்டும். நாம் அடிமட்ட நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த விளைகிற அதேவேளையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை நோக்கி நகர்வதே சாலச்சிறந்ததாகும். மாற்றத்திற்கான வழியானது பொதுத் தேர்தலையும் தாண்டிய ஒன்று என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிந்துள்ளதோடு மக்களின் நாளாந்த நடைமுறை வாழ்க்கை சவால்களையும் புதிய அரசின் கவனத்திற்கு கொண்டுவருவதற்குத் தவறவில்லை. – என்றார்.

Related Posts