Ad Widget

நித்தியகலாவை ஏன் கொலை செய்தேன்! சந்தேகநபரின் முழுமையான வாக்குமூலம்

கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன.

அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தில்,

“குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது. அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை என்னுடையதுதான். அதனால் அவள் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள்.

பின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்து, கடந்த 28ம் திகதி அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும் நான் எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டேன்.

பின்னர் அம்பாள் குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து, பின்னர் மீண்டும் உள் பாதைகளால் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றோம்.

வரும் போதே அவள் மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கிவந்தாள். அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்குள் சிறு பிரச்சினை வந்துவிட்டது.

அதன் பின்னரே அவள் பாதுகாப்பு உத்தியோகத்தர் உடையில் வந்தமையால் கழுத்தில், தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது. கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.

பின்னர் இறந்தவள். பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணக் கூடாது என்பதற்காக, அவளது ஆடைகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, அவளது உடலை அருகில் இருந்த வயல் கால்வாய்க்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டேன்.

இதன் பின்னர், கனகபுரம் பகுதியில் அவளின் ஆடைகளை எறிந்துவிட்டு, கைப்பை மற்றும் மேல் சேட்டு என்பவற்றை அம்பாள் குளப்பகுதியில் எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு போல வீட்டுக்கு வந்தேன்.

வந்து பின்பக்கமாக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கில், ஹெல்மட் என்பவற்றை ஒழித்து வைத்து விட்டு மருந்துப் போத்தலைக் கொண்டுவந்தேன்.

அதனை, குடித்து நானும் சாக வேண்டும் என நினைத்த போதிலும், பிறகு பிள்ளைகள் நினைவு வந்ததால் அதனையும் வீடுக்குள் மறைத்து வைத்துவிட்டேன்.

சம்பவ இடத்தில் இடுப்பு நாடா மற்றும் சில தடையங்களைத் தவிர மற்றது எல்லாவற்றையும் நானே கொண்டு வந்தேன். இக் கொலையை நான் மட்டுமே செய்தேன்.

சம்பவ இடம் மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் என எல்லாவற்றையும் என்னால் அடையாளம் காட்ட முடியும். நான் தான் இதனை செய்தேன்” என அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்த்தன, பொலிஸ் அத்தியட்சகர் சமுத்திர ஜீவ, பொலிஸ் மூலஸ்தான பதில் பொலிஸ் பரிசோதகர் லலித்தரத்ன ஆகியோரின் பணிப்பின் பெயரில் கிளிநொச்சி மாவட்ட பெரும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கருணாரத்தினம் ஜெசிந்தனின் தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்த உத்தியோகத்தர்களான நிஹால், விஜயசேகர, மிலன், சங்கர் சந்தன, சிவதாஸ், லீலாவதி, அசங்க ஆகியோர் சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.

தொலைபேசித் தரவுகள் என்பவற்றைக் கொண்டு குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவை பரிசீலனை செய்த போது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசியில் இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலையே நகர்ந்துள்ளமை என்பவற்றைக் வைத்து இன்று மதியம் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையில் இருந்த உத்தியோகத்தரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போது, சந்தேக நபர் மேற்கண்டவாறு ஒப்புதல் வாக்கு மூலத்தினை வழங்கியுள்ளார்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவரால் தடையப்பொருட்கள் வீசப்பட்ட இடமான கனகபுரம் பகுதியில் இருந்து குறித்த பெண்ணின் ஆடைகள் போன்றவற்றை மீட்ட பொலிஸார், அவரது வீட்டுக் சென்று மோட்டார் சைக்கிள் அவர் பாவித்த தொலைபேசி, ஹெல்மட் மற்றும் மருந்துப் போத்தல் என்பவற்றை மீட்டுள்ளனர்.

அம்பாள் குளம் பகுதியில் விடப்பட்ட ஆடைகள் என்பவற்றை சம்பவம் நடைபெற்ற மறுநாளே பொலிஸார் மீட்டிருந்தனர். பின்னர் அவரது மனைவியின் வாக்குமூலம் என்பன பதிவு செய்யப்பட்டு குறித்த விசாரணை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட ரீதியான ஆவணங்கள் தயார் படுத்தப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த விசாரணைகளில் பெரிதும் தமக்கு உதவிய கிளிநொச்சி ஊடகவியளாலர் மற்றும் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் ஆகியோருக்கு பொலிஸார் நன்றியினை தெரிவித்துள்ளனர்.

Related Posts