Ad Widget

நாவற்குழி இளைஞர்கள் விவகாரம்:ஆட்கொணர்வு மனு மீதான விவாதம் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு எழுத்துமூலம் ஆட்சேபனையை, மனுதாரர்கள் சார்பில் நேற்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் செய்த்திய குணசேகர மற்றும் அரச சட்டவாதிகள் மேல் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததுடன் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கே.குருபரன் மற்றும் சட்டத்தரணி வி.திருக்குமரன் ஆகியோரும் முன்னிலையாகியிருந்தனர்.

கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாக கடமையாற்றிய துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினரால் கைது செய்யப்பட்ட 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 3 மனுக்களை மட்டும் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது. மற்றைய 9 பேரின் மனுக்கள் 2002 ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் மீதான விசாரணைகளை யாழ்ப்பாணத்தில் நடத்தக்கூடாது என அன்று யாழ்.மாவட்ட இராணுவ தளபதி, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து, இந்த வழக்குகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டன.

பின்னர், வேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள விசாரிக்க முடியாதென சுட்டிக்காட்டியே, 9 பேரின் ஆட்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த மனுக்களில் 1 ஆம் பிரதிவாதியாக மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலானவும் 2ஆம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதியும் 3ஆம் பிரதிவாதியாக சட்டமா அதிபரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நீதிமன்றை காலம் தாழ்த்தி நாடியமைக்கான காரணம் பாதுகாப்பு அச்சுறுத்தல்களேயாகும். ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் மனுதாரர்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றதா என்ற கேள்வி உள்ளது. குறிப்பாக கடந்த தவணையின் போது, நீதிமன்ற வளாகத்திலே பல்வேறு புலனாய்வு அதிகாரிகள் நடமாடினர்.

அதற்கு முன்னதாக இந்த மனுதாரர்களின் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற புலனாய்வாளர்கள், தங்களை தொண்டு நிறுவனப் பணியாளர்கள் என அடையாளப்படுத்தி மனுதாரருக்கு முறையற்ற விதத்தில் அழுத்தம் கொடுத்தனர் என மனுதாரர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.

நீதிமன்ற வளாகத்துக்குள் சென்ற தவணையின் போது வந்திருந்த அலுவலகர்கள் என்னுடைய பாதுகாப்புக்காக வந்தனர் என்று பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அதற்கு பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லையா என மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கேள்வி எழுப்பினார்.

அத்துடன் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தே வழக்குகள் பலவற்றை அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு இவர்கள் மாற்றினார்கள் என்றும் மனுதாரர்களின் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.

தற்பாதுகாப்புக்கு என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குறிப்பிட்டதால் நீதிமன்று அதில் தலையிட முடியாது. ஆனால் மனுதாரரால் எழுத்துமூலம் குறிப்பிட்டது போன்று புலனாய்வாளர்களால் மனுதாரருக்கு அச்சுறுத்தல் இருப்பின் எதிர்மனுதாரர்களின் சட்டத்தரணிகள் அதற்குப் பொறுப்புக்கூறவேண்டும் என்று மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts